முதன் முறையாக சவுதி அரேபியாவில் விமானம் ஓட்ட போகும் பெண்கள்


முதன் முறையாக சவுதி அரேபியாவில் விமானம் ஓட்ட போகும் பெண்கள்
x
தினத்தந்தி 14 Sep 2018 7:43 AM GMT (Updated: 14 Sep 2018 7:43 AM GMT)

முதன் முறையாக சவுதி அரேபியாவில் விமானம் ஓட்ட போகும் பெண்கள் . 1000க்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

ரியாத்,

சவுதி அரேபியாவில் பெண்கள் விமானம் ஓட்டுவதற்கு அதிக அளவில் முன்வந்து இருக்கிறார்கள். இது அந்த நாட்டில் பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.

சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் அடைந்து இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் பெரிய அளவில் மாற்றம் அடையவில்லை. பெண்களுக்கு அந்த நாடுகளில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். முக்கியமாக பெண்களுக்கு ஆதரவாக நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டது. 2018ல் இருந்து பெண்கள் கார் ஓட்டலாம் என்று அவர் அறிவித்தார். பலரும் அவரின் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

 பொதுவாக சவுதி விமானங்களில் சவுதி பெண்கள் பணியாற்ற மாட்டார்கள். பிலிப்பைன்ஸில் இருந்து இதற்காக பெண்கள் பணிக்கு அழைத்து வரப்படுவார்கள்.   படித்த சவுதி பெண்கள் கூட அங்கு விமானியாக பணியாற்றியது இல்லை. இந்த நிலையில்தான் தற்போது பெண்கள் சவுதி அரேபியாவில் விமானம் ஓட்டுவதற்கு அதிக அளவில் முன்வந்து இருக்கிறார்கள்.

ரியாத்தை சேர்ந்த் ஃபிளைநாஸ் என்ற விமான நிறுவனம் தங்கள் விமானத்தில் பணியாற்ற சவுதியை சேர்ந்த பெண் துணை பைலட்டுகளையும், பெண் பணியாளர்களையும் அழைத்து இருக்கிறது. இந்த நிலையில் துணை பைலட்டுகளாக பணியாற்ற மட்டும் சவுதியில் தற்போது 1000க்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தொடர்ந்து விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.

அடுத்த மாதம் அங்கு முதல் பெண் துணை விமானி ஒருவர் பறப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே பெண்கள் ராணுவத்தில் சேரலாம் என்றும் சல்மான் கூறியுள்ளார். சாதாரண வீராங்கனையாக இல்லாமல் பெரிய பொறுப்புகளும் பெண்களுக்கு ராணுவத்தில் வழங்கப்பட உள்ளது.

Next Story