சடலத்துடன் ஆம்புலன்சை திருடிச் சென்றவர்!


சடலத்துடன் ஆம்புலன்சை திருடிச் சென்றவர்!
x
தினத்தந்தி 15 Sep 2018 10:24 AM GMT (Updated: 15 Sep 2018 10:24 AM GMT)

மெக்சிகோ நாட்டில் சடலத்துடன் சவப்பெட்டி இருப்பது தெரியாமல் ஆம்புலன்ஸ் வாகனத்தைத் திருடிச் சென்ற திருடன் ‘திருதிரு’வென்று விழித்திருக்கிறான்.

மெக்சிகோ நாட்டின் மத்தியப் பகுதியில் இருக்கும் லாகியூபாகியூ பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 80 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்தார். அவரது சடலம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பின்னர் அருகிலுள்ள அவரது ஊருக்குக் கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைக்கப்பட்டது.

இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த சுமார் 40 வயது நபர், சாவியுடன் ஆம்புலன்ஸ் நின்றிருந்ததைப் பார்த்ததும், வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

முதியவரின் சடலம் இருந்த ஆம்புலன்சை காணாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

சுமார் 40 நிமிட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை மடக்கிப் பிடித்த போலீசார், சடலத்தை மீட்டனர். வாகனத்தைத் திருடிய அந்த நபரையும் கைது செய்தனர்.

அவசரக்கார திருடன்! 

Next Story