இங்கிலாந்தில் மீண்டும் பயங்கரம்: உணவகத்தில் 2 பேர் மீது நச்சுப்பொருள் தாக்குதல்


இங்கிலாந்தில் மீண்டும் பயங்கரம்: உணவகத்தில் 2 பேர் மீது நச்சுப்பொருள் தாக்குதல்
x
தினத்தந்தி 17 Sep 2018 11:30 PM GMT (Updated: 17 Sep 2018 7:43 PM GMT)

இங்கிலாந்து உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷியர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷையர் மாவட்டத்தின் சாலிஸ்பரி என்னும் சுற்றுலா நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்டேன்ஹெஞ்ச் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தூண்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாலிஸ்பரி நகரில் குவிவது வழக்கம். இதனால் சாலிஸ்பரி நகரில் உள்ள உணவகங்களும், விடுதிகளும் வார விடுமுறை நாட்களில் நிரம்பி வழியும்.

இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம், சாலிஸ்பரி நகரின் ஹை ஸ்டீரிட் தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒருவர் ரஷியாவைச் சேர்ந்தவர் ஆவார்.

அப்போது இருவரும் திடீரென மயக்கம் அடைந்து கீழே சரிந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ஹை ஸ்டீரிட் பகுதியை சுற்றி வளைத்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்தையும் தடை செய்தனர். உணவகத்துக்கு வந்து சென்றவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

உணவகத்தில் சாப்பிட்ட அந்த ஆணும், பெண்ணும் ‘நோவிசாக்’ என்னும் நச்சுப் பொருள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இத்தகைய நச்சுப்பொருளை ரஷிய உளவுத்துறையினரும், ராணுவத்தினரும் ரகசியமாக பயன்படுத்துவதாக கூறப்படுவது உண்டு.

கடந்த மார்ச் மாதம் ரஷியாவின் முன்னாள் உளவாளி செர்கோய் ஸ்கிர்பால் தனது மகள் யூலியாவுடன் இதே சாலிஸ்பரி நகரில் நச்சுப் பொருளால் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்ததும், பின்னர் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், நினைவுகூரத்தக்கது. ஸ்கிர்பால், யூலியா இருவர் மீதும் நரம்பு மண்டலத்தை பாதிக்க வைத்து உயிரை இழக்கச் செய்யும் ‘நோவிசாக்’ நச்சுப் பொருள் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.

கடந்த ஜூலை மாதம் இதே சாலிஸ்பரி நகரின் புறநகரான அமெஸ்பரியில் மர்ம மனிதர்கள் வாசனை திரவிய பாட்டில் மூலம் நடத்திய ‘நோவிசாக்’ தாக்குதலில் டான் ஸ்டர்கெஸ் என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய காதலர் சார்லி ரோவ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவங்களில் ரஷிய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக இங்கிலாந்து அரசு பகிரங்கமாகவே குற்றம் சாட்டியது. ஆனால் இதை ரஷிய அதிபர் புதின் மறுத்தார்.

இதற்கிடையே ஸ்கிர்பால், யூலியா ஆகியோரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ரஷியர்களான அலெக்சாண்டர் பெட்ரோவ் மற்றும் ரஸ்லன் பொஷிரோவ் ஆகியோர் தங்களுக்கும் இதற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மறுத்துள்ளனர். அவர்கள் இருவரும் ரஷிய டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் சாலிஸ்பரி நகருக்கு சென்றது உண்மைதான். ஆனால் எங்களது சுற்றுலாவை முடித்துவிட்டு ஒரு மணி நேரத்தில் லண்டன் திரும்பிவிட்டோம்” என்று கூறினர்.

இந்தநிலையில் அதே சாலிஸ்பரி நகரில் ரஷியாவைச் சேர்ந்த ஒருவரும் அவருடன் இருந்த மற்றொருவரும் நோவிசாக் நச்சுப் பொருளால் தாக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story