

ரஷ்யாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி அன்னா (30), நிஸ்னி நோவ்கோரோட் பகுதியில் பிறந்தார். அதன் பின்னர் கடந்த 2006-ம் ஆண்டு குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக இஸ்ரேல் நாட்டின் குடிமகளாக ஆனார். பின்னர் 2008-ம் ஆண்டு அலெக்ஸ் கிங் என்ற 42 வயது தொழிலதிபரை இங்கிலாந்தில் சந்தித்தார். அவரை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டு இங்கிலாந்தின் லேண்ட்போர்டு கிராமத்தில் குடியேறினார். இந்த நிலையில் கடந்த 16-ம் தேதியன்று சாலிஸ்பரி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில், அலெக்ஸ் ஆண்கள் கழிப்பறையில் வாயில் நுரை தள்ளி கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாடல் அழகி அன்னா, ரஷ்ய அதிபர் புதின் மீது குற்றசாட்டு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய தந்தை ரஷ்ய அதிபரின் கீழ் பணியாற்றி வரும் உயர் ராணுவ அதிகாரி. எங்களுடைய உயிருக்கு அதிகமான அச்சுறுத்தல்கள் வந்ததையடுத்து நாங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து இங்கிலாந்திற்கு வந்துவிட்டோம்.
இதனால் நாங்கள் இங்கிலாந்து உளவாளிகள் என நினைத்துக்கொண்டு, ரஷ்ய அதிபர் புதின் எங்களை கொலை செய்ய முயற்சி செய்கிறார். அன்றைய தினம் இருவரும் வெள்ளை நிறத்திலான பானத்திற்கு ஆர்டர் செய்திருந்தோம். அதனை உண்பதற்கு முன்பு கூட, இதில் விஷம் இருக்காது என நான் நினைக்கிறேன் என்று விளையாட்டாக கூறினேன். அதனை பருகிய சில மணி நேரத்திலே உடல்நலனில் குறைபாடு ஏற்பட்டது.
உடனே பாத்ரூம் சென்றுவிட்டு வருவதாக அலெக்ஸ் என்னிடம் கூறினார். ஆனால் 30 நிமிடம் ஆகியும் அவர் கீழே வரவில்லை. இதனால் வேகமாக அவரை பார்க்க சென்றேன். அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் என்னுடைய கணவர் தரையில் கிடந்தார். உடனே உதவிக்கு கூச்சலிட்டேன். பின்னர் தான் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு என்னுடைய கணவரை மருத்துவமனையில் அனுமதித்தோம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் என்னுடைய கணவர் நலமடைந்து வருவார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.