இஸ்ரேல் படையினருடன் மோதல் துப்பாக்கிச்சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் பலி

பாலஸ்தீனத்தில், இஸ்ரேல் உருவானபோது நடந்த போரில், நாட்டை விட்டு வெளியேறிய பாலஸ்தீனியர்கள் அனைவரையும் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இஸ்ரேல் படையினருடன் மோதல் துப்பாக்கிச்சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் பலி
Published on

காசா,

கடந்த மார்ச் மாதம் 30ந்தேதி முதல் பாலஸ்தீனியர்கள் கிரேட் மார்ச் ஆப் ரிட்டர்ன் என்ற பெயரில், வெள்ளிக்கிழமைதோறும் காசாமுனை பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினமும் அங்கு பாலஸ்தீனியர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் டயர்களை எரித்தார்கள். பாலஸ்தீனிய கொடியை அசைத்தார்கள். இஸ்ரேல் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

அப்போது அவர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் அவர்கள்மீது இஸ்ரேல் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். அதைத் தொடர்ந்து இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். 376 பேர் காயம் அடைந்தனர்.

இதை காசா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷரப் அல் கெத்ரா நேற்று நிருபர்களிடம் அறிவித்தார்.

அப்போது அவர், இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். காயம் அடைந்தவர்களில் 192 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 126 பேர் இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com