இத்தாலியில் நைட் கிளப்பில் கூட்ட நெரிசல்; 6 பேர் பலி


இத்தாலியில் நைட் கிளப்பில் கூட்ட நெரிசல்; 6 பேர் பலி
x
தினத்தந்தி 8 Dec 2018 10:40 AM GMT (Updated: 8 Dec 2018 10:40 AM GMT)

இத்தாலியின் நைட் கிளப் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

ரோம்,

இத்தாலியில் அட்ரியாட்டிக் கடற்கரை பகுதியில் அங்கோனா அருகே நைட் கிளப் ஒன்று அமைந்துள்ளது.  அந்நாட்டின் ராப் இசையில் பிரபலம் வாய்ந்த ஸ்பெரா எப்பஸ்டா என்பவரின் கச்சேரி நேற்றிரவு நடந்துள்ளது.

இளைஞர்கள் பலர் ஒன்றாக கூடி பொழுது போக்கும் இந்த கிளப்பிற்கு ஆயிரம் பேர் வரை வந்துள்ளனர்.  அவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் வரை நடனம் ஆடியபடி இருந்துள்ளனர்.  திடீரென ஏதோ புகையும் வாசனையை அவர்கள் அறிந்து உள்ளனர்.

இதனால் அங்கிருந்த இளைஞர்கள் தப்பியோட முயற்சித்து உள்ளனர்.  இதில் ஏற்பட்ட நெரிசலில் ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளனர்.

இதுபற்றி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 வயது சிறுவன் கூறும்பொழுது, அவசரகால வழியே தப்பி செல்வதற்காக நாங்கள் ஓடினோம்.  ஆனால் அது பூட்டப்பட்டு இருந்தது.  இதனால் காவலர்கள் எங்களை திரும்பி செல்லும்படி கூறினர் என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தீயணைப்பு துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இச்சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

Next Story