மும்பை சிறையில் விஜய் மல்லையாவுக்கு எந்த சிக்கலும் ஏற்படாது - லண்டன் கோர்ட்டு நீதிபதி கருத்து


மும்பை சிறையில் விஜய் மல்லையாவுக்கு எந்த சிக்கலும் ஏற்படாது - லண்டன் கோர்ட்டு நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 10 Dec 2018 11:15 PM GMT (Updated: 10 Dec 2018 9:38 PM GMT)

மும்பை சிறையில் விஜய் மல்லையாவுக்கு எந்த சிக்கலும் ஏற்படாது என லண்டன் கோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

லண்டன்,

பிரபல தொழில் அதிபரும், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என லண்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின்போது, விஜய் மல்லையா தரப்பில் வாதிட்ட வக்கீல்கள், இந்திய சிறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அவரை நாடு கடத்தி மும்பை சிறையில் அடைத்தால் அது மனித உரிமைகளை மீறுவதாக அமையும் என்றனர்.

அதற்கு தலைமை நீதிபதி எம்மா ஆர்புத்னோட் கூறியதாவது:-

விஜய் மல்லையாவை மும்பை சிறையில் அடைத்தால் அவர் சிக்கலான சூழலை எதிர்கொள்ளும் நிலைமை உருவாகும் என்று கூறுவது தவறு. இந்திய அரசு அளித்துள்ள சமீபத்திய வீடியோ அந்த சிறை நல்ல நிலையில் பராமரிக்கப்படுவதை காட்டுகிறது.

தவிர, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களுக்காக அவருக்கு தனிப்பட்ட முறையில் தரமான சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, மும்பை சிறையில் அடைக்கப்பட்டால் அவருக்கு சிக்கலான நிலை ஏற்படும் என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மேலும் விஜய் மல்லையாவுக்கு எதிராக இந்தியாவில் தவறான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்பட்டதற்கான அறிகுறியும் தென்படவில்லை. வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்களை பார்க்கும்போது இந்த வழக்கிற்கு அவர் பதில் அளிக்கவேண்டிய நிலையே காணப்படுகிறது. எனவே அவரை நாடு கடத்தலாம். இவ்வாறு நீதிபதி கூறினார்.


Next Story