பொதுத்தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலையில் பிரதமர் பதவி வகிப்பதில் அர்த்தமில்லை -ராஜபக்சே


பொதுத்தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலையில் பிரதமர் பதவி வகிப்பதில் அர்த்தமில்லை -ராஜபக்சே
x
தினத்தந்தி 15 Dec 2018 10:24 AM GMT (Updated: 15 Dec 2018 10:24 AM GMT)

பொதுத்தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலையில் பிரதமர் பதவி வகிப்பதில் அர்த்தமில்லை என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார். இதன் மூலம் அந்நாட்டில் கடந்த 50 நாட்களாக நிலவி வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 26-ம் தேதி புதிய பிரதமராக ராஜபக்சேவை, அதிபர் சிறிசேனா நியமித்தார். 

இதையடுத்து இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதால்  நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட சிறிசேனா, ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம்,  சிறிசேனா உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது. 

மேலும் ராஜபக்சே பிரதமராக செயல்படவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதாக அதிபர் சிறிசேனா அறிவித்ததை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சிறிசேனாவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். நாளை ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில்,  இலங்கையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின் மகிந்த ராஜபக்சே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொதுத்தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலையில் பிரதமர் பதவி வகிப்பதில் அர்த்தமில்லை. இலங்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை நன்கு வாசித்தேன். அதனை மதித்து செயல்படுவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story