காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து -ராகுல் காந்தி


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து -ராகுல் காந்தி
x
தினத்தந்தி 11 Jan 2019 5:16 PM GMT (Updated: 11 Jan 2019 5:16 PM GMT)

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கூறினார்.

துபாய்,

துபாய்க்கு 2 நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று துபாய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய நாடாளுமன்ற தேர்தல்  விரைவில் வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதில் ஒருபகுதியாக ராகுல்காந்தி அங்குள்ள தொழிலாளர் காலனியில் இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்களை சந்தித்துப் பேசினார்.

அதில், “இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து துபாயில் வேலை செய்து வருகிறீர்கள். அதன்மூலம் இந்தியாவிற்கு பெரும் உதவி செய்து வருகிறீர்கள். எனவே உங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் சிந்தும் வியர்வை, ரத்தத்தினால் இந்த நாட்டை வளப்படுத்தி வருகிறீர்கள். உங்களால் அனைத்து இந்தியர்களும் பெருமிதம் அடைகிறோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்” என கூறினார்.

இன்று மாலை துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய-அரேபிய கலாச்சாரா நிகழ்ச்சிக்கு ராகுல்காந்தி  தலைமை தாங்கினார்.  அப்போது பேசிய அவர், “கடந்த நான்கரை ஆண்டுகளாக என் நாட்டில் சகிப்புத் தன்மையில்லாததை கூறுவதில் வருத்தமடைகிறேன். அரசியல் காரணங்களுக்காக எனது அன்பான நாடு இந்தியா தற்போது பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது நாம் எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை வேலையின்மைதான். வேலையில்லா திண்டாட்டம் மட்டுமின்றி சீனாவுக்கும் சவால் விடும் நிலையை உருவாக்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு நாட்டை நாம் ஒருபோதும் இயக்க முடியாது. மேலும் ஒருவரின் சிந்தனையே சரி, மற்றவர்கள் கூறுவது தவறு என்கிறார்கள் என மோடி மீது ராகுல் மறைமுக விமர்சனம் செய்தார்.

Next Story