கென்யா ஒட்டலில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு


கென்யா ஒட்டலில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2019 12:18 PM IST (Updated: 17 Jan 2019 12:18 PM IST)
t-max-icont-min-icon

கென்யா ஒட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

நைரோபி

கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் ‘டசிட் டி–2’ என்ற சொகுசு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் 101 அறைகள், உணவுவிடுதி, அலுவலக கட்டிடங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகும். நேற்று முன்தினம் மதியம் அந்த ஓட்டல் வளாகத்திற்குள்  அல் சபாப் பயங்கரவாதிகள் நுழைந்தனர். அவர்களில் ஒரு பயங்கரவாதி தனது உடலில் கட்டி எடுத்து வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

அதைத் தொடர்ந்து மற்ற பயங்கரவாதிகள் நாலாபுறமும் சென்று அங்கிருந்து கொண்டு ஓட்டலில் இருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பதறியடித்தவாறு ஓட்டம் பிடித்தனர். அங்கு குண்டு வெடிப்பு சத்தமும் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.தகவல் அறிந்ததும் கென்யா படையினரும், அங்குள்ள பிற நாடுகளின் தூதரகங்களில் இருந்த வெளிநாட்டுப் படைகளும் சம்பவ ஓட்டலுக்கு விரைந்து சுற்றி வளைத்தன.

சுமார் 20 மணி நேரம் நடந்த இந்த சண்டை நேற்று காலை முடிவுக்கு வந்தது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்டதாக முதலில் அறிவிப்பு வெளியானது. அதன்பின்னர், மீட்பு பணியை தொடங்கியபோது, மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்டன. 

இதன்மூலம் உயிரிழப்பு 21 ஆக உயர்ந்தது. தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். பலத்த காயங்களுடன் 28 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்ததற்கு பழிதீர்க்கும் வகையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது
1 More update

Next Story