குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - இலங்கை பிரதமர்


குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - இலங்கை பிரதமர்
x
தினத்தந்தி 21 April 2019 5:11 PM GMT (Updated: 21 April 2019 5:11 PM GMT)

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். #SriLanka

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்புவில் காலை கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

மாலையும் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 207 வரை உயர்ந்துள்ளது. மேலும் 400-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கொழும்பு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்கள் சந்திப்பில், “ இது ஒரு துரதிருஷ்டமான சம்பவம். இச்சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது. இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை மக்கள் ஒன்றுபட்டு அமைதியாக இருக்கவேண்டும். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார். 

Next Story