டாக்காவில் இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை


டாக்காவில் இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2019 11:14 AM GMT (Updated: 29 April 2019 11:47 AM GMT)

வங்காளதேசத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சோதனை மேற்கொண்டபோது இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர்.

டாக்காவிற்கு வெளியே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கல் தொடர்பாக தகவல் கிடைத்ததும், அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டது. அப்போது வீடு ஒன்றை சுற்றி வளைத்தது. பயங்கரவாதிகள் சுதாரித்துக்கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர். அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இருதரப்பு இடையே சண்டை நடைபெற்றபோது  பயங்கரவாதிகளால் சமாளிக்க முடியவில்லை.

இறுதியில் பயங்கரவாதிகள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர் என சிறப்பு படைப்பிரிவு அதிகாரி பெனசீர் அகமது கூறியுள்ளார். அவர்கள் யாரென்பதை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை அவசியமாகும். மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். இதனால் சுற்றியிருந்த பகுதிகளும் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

இதற்கிடையே வீட்டின் உரிமையாளர், அவருடைய மனைவியை போலீஸ் கைது செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள மசூதியின் இமாமிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

தற்கொலை செய்துக்கொண்டவர்கள் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது. டாக்காவில் 2016-ம் ஆண்டு ஜூலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் 22 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது படைகள்  நடவடிக்கையை மேற்கொண்டது. தேசம் முழுவதும் நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், பலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story