அமெரிக்க உளவு விமானத்தை வீழ்த்தியதால் ஈரானை தாக்க உத்தரவிட்டு கடைசி நிமிடத்தில் வாபஸ் - டிரம்ப் தடாலடி


அமெரிக்க உளவு விமானத்தை வீழ்த்தியதால் ஈரானை தாக்க உத்தரவிட்டு கடைசி நிமிடத்தில் வாபஸ் - டிரம்ப் தடாலடி
x
தினத்தந்தி 21 Jun 2019 6:25 AM GMT (Updated: 21 Jun 2019 7:27 PM GMT)

அமெரிக்க உளவு விமானத்தை வீழ்த்தியதால், ஈரானை தாக்க உத்தரவிட்டு கடைசி நிமிடத்தில் டிரம்ப் அதனை வாபஸ் பெற்றார்.

வாஷிங்டன்,

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரான் அறிவித்தது.

இதன் காரணமாக ஈரானை அச்சுறுத்தும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை அமெரிக்கா குவித்தது. அண்மையில் ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான்தான் காரணம் எனக்கூறி மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு கூடுதலாக ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது.

இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதனால் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா-ஈரான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தங்கள் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் வான்பரப்பில் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்  தெரிவித்தது.  தங்கள் நாட்டு ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. அதே சமயம் அந்த விமானம் ஈரானின் வான்பரப்பில் நுழையவில்லை என்றும் சர்வதேச நீர்பரப்புக்கு மேலே பறந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. 

130 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால், ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்ததாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ்  செய்தி வெளியானது.  

பொதுமக்கள் மற்றும் ஈரான் ராணுவ வீரர்களுக்கு அதிக சேதம் ஏற்படாமல் ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்ட அமெரிக்கா, வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் தாக்குதல் நடத்த முடிவு செய்ததாகவும், ஈரானின் ஏவுகணைகள் கண்காணிப்பு ரேடார்கள் ஆகியவற்றை குறிவைத்து ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து டிரம்ப், ஒரு ராணுவ ஜெனரலிடம், “இந்த தாக்குதல்களால் எத்தனை உயிர்கள் பலியாகும்?” என கேட்டார். அதற்கு அவர், “150 பேர் பலியாவார்கள்” என பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து, கடைசி நிமிடத்தில் அந்த தாக்குதல் உத்தரவை டிரம்ப் வாபஸ் பெற்றார். இதை அவரே டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Next Story