சென்னை குடிநீர் பஞ்சம்: புழல் ஏரியின் செயற்கைக்கோள் படம்


சென்னை குடிநீர் பஞ்சம்: புழல் ஏரியின் செயற்கைக்கோள் படம்
x
தினத்தந்தி 24 Jun 2019 10:55 AM GMT (Updated: 24 Jun 2019 10:55 AM GMT)

அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், சென்னை குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக தலைநகரான சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளன. மேலும், பல ஓட்டல்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

குடிநீருக்காக பல வாரங்கள் காத்திருக்கும் நிலை உருவாகி மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தண்ணீருக்காக தமிழகமே தவித்துவரும் நிலையில், எப்போது மழை பெய்யும் என வானத்தை ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர் பொதுமக்கள்.

பள்ளிகள், தொழிற்சாலைகள் என அனைத்து விதமான நிறுவனங்களும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மிக மோசமான நிலையில் உள்ளன. இதனை அடுத்து, தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், 

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தில், ஜூன் 15 ந்தேதி 2018ம் ஆண்டு புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவோடு,  2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடந்த ஞாயிறு அன்று எடுக்கப்பட்ட புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவு ஒப்பிடப்பட்டுள்ளது.  சென்னையில் சுமார் 46 லட்சம் மக்களுக்கு புழல் ஏரி தண்ணீர் வழங்குகிறது என குறிப்பிடப்பட்டு  உள்ளது

அதன்படி, 2018ம் ஆண்டில் புழல் ஏரியின் நீர் இருப்பு அளவில் மிக அதிகமாகவும், தற்போது மிகவும் வறண்ட நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதேபோன்று, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு அளவும் அபாயகரமான நிலையில் இருக்கிறது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story