பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்


பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:30 PM GMT (Updated: 25 Jun 2019 8:57 PM GMT)

பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டெஹ்ரான்,

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் உருவான சூழலில் ஈரானில் உளவு பார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானின் முக்கிய பகுதிகளில் ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, கடைசி நேரத்தில் அந்த உத்தரவை திரும்ப பெற்றார்.

ஆனாலும் ஈரானுக்கு பாடம் புகட்டுவதற்காக அந்நாட்டின் புரட்சிகர படையின் ஆயுதகட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்கள் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் நடத்தி அவற்றின் செயல்பாட்டை முடக்கியது.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல் இதுவரை வேறு எந்த நாட்டுக்கும் விதிக்காத வகையில் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. ஈரானின் உச்ச அதிகாரம் படைத்த தலைவர் அயத்துல்லா அல் காமெனி மற்றும் முப்படை தளபதிகள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டன.

இதற்கான உத்தரவில் நேற்று முன்தினம் கையெழுத்திட்ட ஜனாதிபதி டிரம்ப், “ஈரானுடன் போரை விரும்பவில்லை. அதே சமயம் அந்நாடு அணு ஆயுதங்களை வைத்திருக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என கூறினார்.

இந்த நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றம் தங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும், இதற்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அதன் உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அல் ஒட்டாய்பி கூறுகையில், “அமெரிக்கா-ஈரான் இடையேயான கருத்து வேறுபாடுகள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் களையப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன” என்றார்.

ஆனால், பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் மஜித் தக்த் ரவாஞ்சி இதுபற்றி கூறியதாவது:-

“அமெரிக்கா, ஈரான் மீது அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது. தற்போது ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடையை அமெரிக்கா விதித்திருக்கிறது. அமெரிக்கா இதே அணுகுமுறை தொடரும் பட்சத்தில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்பே கிடையாது” என்றார்.

மேலும் அவர், “தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் பொருளாதார தடைகள் ஈரான் மக்கள் மற்றும் நாட்டின் தலைவர்களுக்கு எதிரான அமெரிக்காவின் விரோத போக்கை காட்டும் மற்றொரு அறிகுறியாகும். அத்துடன் சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமெரிக்கா மதிப்பு அளிப்பதே இல்லை என்பதையும் காட்டுகிறது” என கூறினார்.


Next Story