தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது :அமெரிக்க அதிபர் டிரம்ப்


தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது   :அமெரிக்க அதிபர் டிரம்ப்
x
தினத்தந்தி 29 Nov 2019 1:45 AM GMT (Updated: 29 Nov 2019 2:54 AM GMT)

டொனால்டு டிரம்ப் திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றார். இந்த பயணத்தின் போது, தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியதாக தெரிவித்தார்.

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலீபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது. எனினும் இந்த உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்களே அதிகளவில் கொல்லப்படுவதால், போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா அரசுகள் முனைப்பு காட்டின.

இதன் பலனாக தலீபான் பயங்கரவாத அமைப்பும், அமெரிக்க அரசும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. அதன்படி கத்தார் தலைநகர் தோஹாவில் தலீபான் அமைப்பின் பிரதி நிதிகள் மற்றும் அமெரிக்க அரசு அதிகாரிகள் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென தலீபான்களுடான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக டிரம்ப் கடந்த செப்டம்பரில் அறிவித்தார்.

இதற்கு தலீபான்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த சூழலில்,  தலீபான்களுடன் மீண்டும்  பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வரும் நோக்கத்தில் தலீபான்களுடன் தனது நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக  ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். அதேவேளையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினரை திரும்பப்பெறுவதற்காக கால நிர்ணயம் எதையும் டிரம்ப் குறிப்பிடவில்லை. 

”தலீபான்கள் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தையை துவங்க இருப்பதாகவும், தலீபான்களுடன் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்வார்கள்” என கருதுவதாகவும் டிரம்ப் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். 


Next Story