மெக்சிகோ நாட்டில் அதிகாலை நேரத்தில் எரிவாயு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 6 பேர் பலி


மெக்சிகோ நாட்டில் அதிகாலை நேரத்தில் எரிவாயு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 6 பேர் பலி
x
தினத்தந்தி 29 Dec 2019 10:55 PM GMT (Updated: 29 Dec 2019 10:55 PM GMT)

மெக்சிகோ நாட்டில் அதிகாலை நேரத்தில் எரிவாயு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவில் குவான்ஜூவாட்டோ மாகாணம், மத்திய யுரியங்காட்டோ பகுதியில், ஒரு எரிவாயு நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.15 மணிக்கு துப்பாக்கி ஏந்திய குழு புகுந்து, சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது.

அப்போது அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் சிக்கி, 6 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், போலீஸ் படையினரும் அங்கு விரைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.

குவான்ஜூவாட்டா மாகாணம், சுற்றுலா பயணிகளால் விரும்பப்படுகிறது. இருப்பினும் அங்கு இந்த ஆண்டில் 11 மாதங்களில் 3,211 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

இந்த மாகாணத்தில் உள்ளூர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திருட்டு எரிபொருள் வர்த்தகர்கள் இடையே மோதல்கள் அதிகரித்து வருவதால், ஒரு கடினமான கால கட்டத்தை மாகாணம் எதிர்நோக்கி உள்ளதாக போலீசார் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story