இந்தியாவின் கொரோனா சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணி; யுனிசெப் அமைப்பு கருத்து


இந்தியாவின் கொரோனா சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணி; யுனிசெப் அமைப்பு கருத்து
x
தினத்தந்தி 7 May 2021 12:51 AM GMT (Updated: 7 May 2021 12:51 AM GMT)

இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும் என்று ஐ.நா.வின் துணை அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

கொரோனா ஆவேச எழுச்சி
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, ஆவேச எழுச்சியாக மாறி வருகிறது. நேற்று வாரத்தில் இரண்டாவது முறையாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் 24 மணி நேரத்தில் இறந்திருக்கிறார்கள்.இந்த தருணத்தில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. ஐ.நா.சபையின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப், உயிர் காக்கும் மருந்துகளையும், முக ஷீல்டுகளையும் அனுப்பியது.

எச்சரிக்கை மணி
இந்த அமைப்பின் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போர் கூறியதாவது:-

இந்தியாவின் சோகமான நிலைமை நம் அனைவருக்கும் எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். இப்போது உலகம் முன்வந்து, இந்தியாவுக்கு உதவாவிட்டால், வைரஸ் தொடர்பான இறப்புகள் பிராந்தியத்திலும், உலகமெங்கும் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரழிவை தடுப்போம்
யுனிசெப் அமைப்பின் தெற்காசிய இயக்குனர் ஜார்ஜ் லாரியா அட்ஜெய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

பேரழிவைத்தடுக்க அரசுகள் தங்கள் அதிகாரத்துக்குள்ளான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். சர்வதேச சமூகம், தாமதமின்றி முன்வந்து உதவ வேண்டும்.தெற்காசியாவில் கொரோனாவால் 2 லட்சத்து 28 ஆயிரம் குழந்தைகள், 11 ஆயிரம் தாய்மாரின் உயிர்கள் பறிபோய் உள்ளது. வைரஸ்களுக்கு எல்லை கிடையாது. நாம் உலக சமுதாயமாய் ஒன்றுபட்டு, இந்த பேரழிவை தடுத்து நிறுத்தி நமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story