இஸ்ரேல் போலீசாரால் பாலஸ்தீனர்கள் 4 பேர் சுட்டுக்கொலை


இஸ்ரேல் போலீசாரால் பாலஸ்தீனர்கள் 4 பேர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 16 Aug 2021 11:46 PM GMT (Updated: 16 Aug 2021 11:46 PM GMT)

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.

சர்ச்சைக்குரிய பகுதிகளான மேற்கு கரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரம் சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் தொடர்ந்து வருகிறது.மேற்கு கரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரில் உள்ள பாலஸ்தீனர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதும், அப்போது நிகழும் வன்முறைகளில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பாலஸ்தீனர்களை சுட்டு கொல்வதும் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் மேற்கு கரை பகுதியில் அமைந்துள்ள ஜெனின் நகரில் அண்மையில் இஸ்ரேல் போலீசாரால் பாலஸ்தீன வாலிபர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.இந்த நிலையில் இஸ்ரேல் எல்லை பாதுகாப்பு படை போலீசார் பாலஸ்தீனர் ஒருவரை கைது செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஜெனின் நகருக்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த கும்பல் ஒன்று போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையின் இறுதியில் பாலஸ்தீனர்கள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். அதே வேளையில் இஸ்ரேல் போலீசார் தரப்பில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இஸ்ரேல் ஒரு கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி இந்த சம்பவத்தை பாலஸ்தீன அரசு வன்மையாக கண்டித்துள்ளது.

Next Story