எரிபொருள் கொள்முதல்: இந்தியாவிடம் கடன் உதவி கோரும் இலங்கை..!


எரிபொருள் கொள்முதல்: இந்தியாவிடம் கடன் உதவி கோரும் இலங்கை..!
x
தினத்தந்தி 17 Oct 2021 8:13 AM GMT (Updated: 17 Oct 2021 8:13 AM GMT)

கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் இலங்கை கடுமையான அந்நிய செலவாணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

கொழும்பு,

கொரோன பெருந்தொற்று பாதிப்பால் இலங்கையின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால், அந்நாடு  நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.  கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியிலும் அந்நாடு சிக்கியுள்ளதால் எரிபொருள் கொள்முதல் செய்வதிலும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளது. 

இலங்கையில் தற்போது உள்ள நிலவரப்படி வரும் ஜனவரி மாதம் வரை மட்டுமே எரிபொருளுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும் என்று அந்நாட்டு  எரிசக்தி துறை மந்திரி உதயா கம்மன்பிலா தெரிவித்து இருந்தார். 

இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கழகம், அந்நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளான பாங்க் ஆப் சிலோன் மற்றும் பியூப்பிள்ஸ் வங்கி ஆகிய இரண்டிற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 3.3 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இதனால், எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை நாட இலங்கை திட்டமிட்டுள்ளது.  

இது குறித்து சிலோன் பெட்ரோலியம் கழகத்தின் தலைவர் கூறும் போது, “ இந்திய-இலங்கை பொருளாதார கூட்டாண்மை ஏற்பாட்டின் கீழ்  அமெரிக்க டாலர் 500 மில்லியன் நிதி உதவியை  பெறுவதற்காக நாங்கள் தற்போது இந்திய தூதரகத்தின் மூலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.  

இந்தியா மற்றும் இலங்கைக்கான எரிசக்தி துறை செயலர்கள் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவார்கள் என அந்நாட்டு நிதித்துறை செயலர் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 


Next Story