ராணி 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு எத்தனை பேர் அஞ்சலி செலுத்தினர்? - இங்கிலாந்து தகவல்


ராணி 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு எத்தனை பேர் அஞ்சலி செலுத்தினர்? - இங்கிலாந்து தகவல்
x

Image Courtesy: AFP

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் கடந்த 19-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் கடந்த 14-ம் தேதி முதல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

14-ம் தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு கடந்த 19-ம் தேதி வரை லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து 19-ம் தேதி 2-ம் எலிசபெத்தின் உடல் விண்ட்சொர் மாளிகையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கிறிஸ்தவ மத தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் 5 நாட்கள் வைக்கப்பட்ட 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் எத்தனை பேர் அஞ்சலி செலுத்தினர் என்ற தகவலை இங்கிலாந்து கலாச்சாரத்துறை மந்திரி இன்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியதாக இங்கிலாந்து கலாச்சாரத்துறை மந்திரி மைகில் டொனிலென் தெரிவித்துள்ளார்.


Next Story