கொலம்பியாவில் சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து: 8 பேர் பலி


கொலம்பியாவில் சிறிய ரக விமானம் மெடலின் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேர் பலியாகினர்.

கொலம்பியா,

மத்திய கொலம்பியாவின் ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரம் செயலிழந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது மோதியது. விபத்துக்குள்ளான விமானம் காற்றில் அடர்த்தியான கறுப்பு புகையை உமிழ்ந்த வண்ணம் இருந்தது.

விமான நிலையத்தின் டுவிட்டர் கணக்கு, விமானத்தில் இருந்த ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் இறந்ததாக அறிவித்தது. இந்த விபத்தில் ஏழு குடியிருப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆறு கட்டிடங்கள் சேதமடைந்தன. வீட்டில் யாரேனும் காயமடைந்தார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சிறிய ரக விமானம் டேக்ஆப் செய்யும் போது என்ஜின் செயலிழப்பைக் காட்டியுள்ளது. ஆனால் ஓலயா ஹெர்ரெரா விமான நிலையத்திற்குத் திரும்ப முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மெடலின் ஆண்டிஸ் மலைகளால் சூழப்பட்ட ஒரு குறுகிய பள்ளத்தாக்கு ஆகும். இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டில், பிரேசிலின் சாப்கோயென்ஸ் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற விமானம் எரிபொருள் தீர்ந்து நகருக்கு அருகிலுள்ள மலைகளில் விழுந்து நொறுங்கியதில் 16 வீரர்கள் உட்பட 71 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story