வெள்ள நிவாரண பணிகளை மேற்பார்வையிட சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது


வெள்ள நிவாரண பணிகளை மேற்பார்வையிட சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது
x

வெள்ள நிவாரண பணிகளை மேற்பார்வையிட 6 ராணுவ வீரர்களுடன் சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து விபத்திற்குள்ளானது.



கராச்சி,



பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த ஜூனில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாகாணத்தில் 10 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து உள்ளன. 1 லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கி.மீ. சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 712 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன.

இதுவரை மொத்தம் 124 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை மாகாண முதன்மை செயலாளர் அப்துல் அஜீஸ் உகைலி உறுதிப்படுத்தி உள்ளார். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளின்றி திறந்த வெளியிலேயே வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய அனைத்தும் சேதமடைந்து விட்டன என்று ஏ.ஆர்.ஒய். நியூஸ் தகவல் தெரிவித்து உள்ளது.

அதேவேளையில், பலூசிஸ்தான் மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல அணைகளில் நீர் நிரம்பி வருகின்றன. கனமழையால் 7 அணைகள் உடைந்து விட்டன என மாகாண பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானில் பலூசிஸ்தான், சிந்து, கில்கிட்-பல்திஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய மாகாணங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு மக்களை மீட்க மற்றும் நிவாரண பணிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பலூசிஸ்தானின் லாஸ்பெலா பகுதியில், வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றுள்ளது. எனினும், பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமானதாகவும் அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து விபத்திற்கு உள்ளாகி இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி பலூசிஸ்தான் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், காணாமல் போன ஹெலிகாப்டர் வின்தர் மற்றும் சஸ்சி புன்னு ஆலயம் பகுதிகளுக்கு இடையே வெடித்து உள்ளது.

அதில், லெப்டினன்ட் ஜெனரல் சர்ப்ராஸ் அலி மற்றும் 5 வீரர்கள் என மொத்தம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் பயணித்து உள்ளனர். இதனையடுத்து, மீட்பு பணிகள் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், ராணுவ ஹெலிகாப்டர் காணாமல் போன விசயம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், விபத்திற்குள்ளானது பற்றி பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தவில்லை.


Next Story