ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் - 19 குழந்தைகள் உள்பட 185 பேர் பலி


ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் - 19 குழந்தைகள் உள்பட 185 பேர் பலி
x

ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இதுவரை 19 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

தெஹ்ரான்,

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டமாக கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஈரான் அரசுக்கு எதிராகவும், ஹிஜாப் ஆடை கட்டுப்பாட்டிற்கு எதிராகவும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினர் தாக்கியதில் போராட்டக்காரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரகள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 19 பேர் குழந்தைகள் என ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


Next Story