அமெரிக்காவில் மேரிலாந்தின் துணை கவர்னராக முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லர் தேர்வு

மேரிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி துணை கவர்னர் என்ற பெருமையை அருணா மில்லர் பெற்றுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாண துணை கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அருணா மில்லர் 6 நவம்பர் 1964 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார். அவர் தனது ஏழு வயதில் தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. 1989 இல், மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பட்டம் பெற்றார். மாண்ட்கோமெரி கவுண்டியில் உள்ள உள்ளூர் போக்குவரத்துத் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றினார்.
58 வயதான அருணா மில்லர் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். மேரிலாந்தின் லெப்டினன்ட் கவர்னர் தேர்தலில் அருணா வெற்றி பெற்றுள்ளார். கவர்னராக வெஸ் மூர், துணை கவர்னராக இந்திய வம்சாவளியான அருணா மில்லர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.மேரிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி துணை கவர்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.






