அமெரிக்க மாகாணங்களை பந்தாடிய பயங்கர புயல்; 12 பேர் பலி


அமெரிக்க மாகாணங்களை பந்தாடிய பயங்கர புயல்; 12 பேர் பலி
x

அமெரிக்க மாகாணங்களை பயங்கர புயல் பந்தாடியது. இதில் 10 பேர் பலியாகினர். சுமார் 14 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். அமெரிக்க மாகாணங்களை பயங்கர புயல் பந்தாடியது. இதில் 10 பேர் பலியாகினர். சுமார் 14 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவை உறையவைத்தது

அமெரிக்காவில் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை குளிர்காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் அங்கு கடும் குளிர், பனிப்பொழிவு மற்றும் புயல், சூறாவளி போன்ற பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் காலநிலை மாற்றத்தின் எதிரொலியால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த குளிர்காலம் அமெரிக்காவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 'வெடிகுண்டு சூறாவளி' என்று அழைக்கப்படும் பயங்கர பனிப்புயல் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உறையவைத்தது. அப்போது பல லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதிபயங்கர புயல் பந்தாடியது

அதன்பின்னரும் அமெரிக்க மாகாணங்களை சக்தி வாய்ந்த குளிர்கால புயல்கள் தாக்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை அதிபயங்கர புயல் பந்தாடியது. கென்டக்கி, அலபாமா, கலிபோர்னியா, மிசிசிப்பி உள்ளிட்ட மாகாணங்களில் மணிக்கு 129 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றின் மேற்கூரைகள் பல மைல் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டன.

இந்த பயங்கர புயல் அங்கு கடுமையான சூறவாளி, பனிப்பொழிவு மற்றும் கனமழையை கொண்டு வந்தது. குறிப்பாக கலிபோர்னியாவில் பலஅடிக்கு பனி கொட்டியது. வீடுகள், கார்கள் உள்ளிட்டவற்றை பனிதுகள்கள் மூழ்கடித்தன.

12 பேர் பலி

இடைவிடாது கொட்டிய கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களில் பல முக்கிய இடங்களில் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு, விமான சேவையும் முடங்கியுள்ளது. இதனால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனிடையே புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மின்தடையால் 7 மாகாணங்களில் சுமார் 14 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். புயல் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் துரிதம்

மேலும் டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், பலர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த புயல் தற்போது தெற்கில் இருந்து வடகிழக்கு மாகாணங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதை தொடர்ந்து டெக்சாஸ் தொடங்கி பென்சில்வேனியா வரை 8 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story