புளூ டிக் கட்டண சேவை வரும் 29-ந்தேதி முதல் அமலாகிறது: எலான் மஸ்க் அறிவிப்பு


புளூ டிக் கட்டண சேவை வரும் 29-ந்தேதி முதல் அமலாகிறது:  எலான் மஸ்க் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2022 6:33 AM GMT (Updated: 16 Nov 2022 8:20 AM GMT)

டுவிட்டரில் புளூ டிக்கிற்கு கட்டண செலுத்தும் முறை வரும் 29-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.



நியூயார்க்,


சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார்.

இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிப்படுத்தி கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்காவிலேயே பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். டுவிட்டர் நிறுவனமே தங்களுக்கு கட்டணம் தரவேண்டும் என்றும் கூறினர்.

இந்நிலையில் வர்த்தக யுக்தியாக, டுவிட்டர் புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது என விலை குறைப்பு செய்து எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டார்.

கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்யலாம் என்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த சேவையானது இந்தியாவில் பெற மாதம் ரூ. 719 செலவாகும் என்றும் இது துல்லியமாக இருந்தால், முதலில் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

டுவிட்டர் புளூ டிக் சேவையை பணம் கொடுத்து பெறும் யாராவது இதனை தவறாக பயன்படுத்தினால், அவர்கள் தங்களின் கட்டண தொகையை இழக்க நேரிடும் என்றும் அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் எலான் மஸ்க் கூறினார்.

இந்த நிலையில், புளூ டிக் கட்டண சேவை கடந்த வாரம் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டது. அடுத்த வார இறுதிக்குள் இந்த சேவையை மீண்டும் கொண்டு வருவேன் என எலான் மஸ்க் கூறினார்.

இதன்படி, டுவிட்டரில் தற்போது மஸ்க் வெளியிட்ட செய்தியில், ஒரு சில மாதங்களில் கட்டணம் கட்டாத அனைத்து புளூ டிக் குறியீடுகளும் நீக்கப்படும் என தெரிவித்து உள்ளார். இதற்கு என்ன பொருள் எனில், இதற்கு முன்பு புளூ டிக் வசதி பெற்றவர்கள், அதனை தொடர்ந்து நீடிக்க செய்ய அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

புது அறிவிப்பின் இடையே, யாரேனும் தங்களது டுவிட்டரின் அதிகாரப்பூர்வ பெயரை மாற்ற முற்பட்டால், அது புளூ டிக் குறியீடு இழப்புக்கு வழிவகுக்கும். அந்த பெயரை டுவிட்டர் நிறுவனம், சேவை விதிகளுக்கு உட்பட்டு உறுதி செய்யும் வரை பெயரை பெற முடியாமல் இழக்க நேரிடும் என்றும் மஸ்க் கூறியுள்ளார்.

புளூ டிக் கட்டண சேவை அறிவிப்பை மஸ்க் வெளியிட்ட பின்னர், 2 நாட்களுக்குள் கடந்த 11-ந்தேதி அதனை தற்காலிக நிறுத்தம் செய்து வைத்துள்ளார். போலி கணக்குகள் புளூ டிக் சேவையுடன் இருப்பது பற்றி அறிந்ததும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சூழலில், புளூ டிக் கட்டண சேவை வருகிற 29-ந்தேதி மீண்டும் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


Next Story