இடைத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்த போரிஸ் ஜான்சனின் கட்சி - பொதுச்செயலாளர் பதவி விலகல்


இடைத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்த போரிஸ் ஜான்சனின் கட்சி - பொதுச்செயலாளர் பதவி விலகல்
x

இங்கிலாந்தில் நடந்த இடைத்தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி விலகினார்.

லண்டன்,

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் தென்மேற்கு தொகுதியான 'டிவெர்டன் அண்ட் ஹானிடன்' மற்றும் வடக்கு தொகுதியான வேக்பீல்டு ஆகிய இரு தொகுதிகளின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் இருவர் பாலியல் புகாரில் சிக்கியதை தொடர்ந்து, தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதை தொடர்ந்து அந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இரு தொகுதிகளிலும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்தது. இரு முக்கியமான தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்தது பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதனிடையே இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் பொதுச்செயலாளரும், போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கமானவருமான ஆலிவர் டவுடன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தோல்விகளை கண்டு துவண்டு போகாமல் தொடர்ந்து, செயல்படுவோம் என போரிஸ் ஜான்சன் சூளுரைத்துள்ளார்.


Next Story