ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்தி மனைவியை கொன்ற கணவன்.. துருக்கி ஓட்டல் அறையில் நடந்த கொடூரம்


ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்தி மனைவியை கொன்ற கணவன்.. துருக்கி ஓட்டல் அறையில் நடந்த கொடூரம்
x

ரத்தக் கறைபடிந்த டி-சர்ட் அணிந்தபடி ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அங்காரா,

இங்கிலாந்தில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்ற ஒரு தம்பதியினர், நேற்று முன்தினம் (நவம்பர் 14) பாத்திஹ் மேவ்லனாகாபி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அங்கு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்தி கொடூரமாக கொன்றுள்ளார்.

ஓட்டல் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் ஊழியர் அந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்பொழுது ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் போலீசுக்கு தகவல் அளித்தார்.

அந்த இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து, அந்த பெண் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது தொண்டை மற்றும் உடல் முழுவதும் சிதைவுகள் காணப்பட்டதை வைத்து, அவர் ஸ்க்ரூடிரைவர் மூலம் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.

இந்த கொலை தொடர்பாக துருக்கி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ரத்தக் கறைபடிந்த டி-சர்ட் அணிந்தபடி ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் அவர் தன் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும், மனைவி தனக்கு போதைப்பொருள் கொடுத்தபின் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தனக்கு உளவியல் பிரச்சனைகள் இருப்பதால் மருந்துகள் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், போலீசார் அந்த ஓட்டல் அறையில் சோதனை செய்தபோது எந்த ஒரு போதைப்பொருளுக்கான தடயமும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.


Next Story