கம்போடியா-வியட்நாம் இடையே கியூ-ஆர் கோடு பணப்பரிமாற்ற முறை அறிமுகம்


கம்போடியா-வியட்நாம் இடையே கியூ-ஆர் கோடு பணப்பரிமாற்ற முறை அறிமுகம்
x

இதன் மூலம் இரு நாடுகள் இடையே எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புனோம்பென்:

கம்போடியா-வியட்நாம் இடையே கியூ-ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து நாட்டின் எந்த பகுதியிலும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட இரு நாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் அறிமுக விழா கம்போடியாவின் சீம் ரீப் மாகாணத்தில் நடைபெற்றது. இதில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வியட்நாம் ஸ்டேட் வங்கி கவர்னர் நிகுயென் தி ஹாங் மற்றும் கம்போடிய தேசிய வங்கியின் கவர்னர் சியா செரே ஆகியோர் தலைமையில், பேமென்ட் லிங்க் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த புதிய கட்டண முறையானது பாதுகாப்பானது மற்றும் வசதியானது எனவும், எல்லை தாண்டிய பணப்பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் கரன்சியின் பயன்பாட்டையும் ஊக்குவிக்கிறது.

இந்த எல்லை தாண்டிய கியூஆர் கோடு கட்டண முறையானது வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் வியட்நாமில் கம்போடிய கரன்சியில் பொருட்களை வாங்குவதற்கும் பணம் செலுத்துவதற்கும் உதவுகிறது. அதேபோல் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் கம்போடியாவில் வியட்நாமின் கரன்சியான டாங்கைப் பயன்படுத்தலாம். இதற்காக சுமார் 1.8 மில்லியன் கம்போடிய வணிகர்கள் வழங்கிய KHQR குறியீடுகளை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

இதன் மூலம் இரு நாடுகள் இடையே எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வியட்நாம் தவிர தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளுடனும் இந்த டிஜிட்டல் பண பரிமாற்றம் தொடர்பான கியூஆர் கோடு லிங்கை கம்போடியா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story