கனடா; நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்...


கனடா; நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்...
x

கனடாவுக்கு, படிப்புக்கான விசாவில் சென்ற பஞ்சாப்பை சேர்ந்த கல்லூரி மாணவி நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்று உள்ளார்.

டொரண்டோ,

பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் லோகியான் காஸ் நகரில் குட்டுவால் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பூனம்தீப் கவுர் (வயது 21). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படிப்புக்கான விசாவில் கனடா நாட்டுக்கு சென்று, தங்கி தனது படிப்பை தொடர்ந்து வருகிறார்.

இவரது தந்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா நகரில் வேலைக்காக சென்று உள்ளார். பல ஆண்டுகளாக அந்நாட்டிலேயே அவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், தனது நண்பர்களுடன் கனடாவில் உள்ள புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சிக்கு பூனம்தீப் கவுர் சென்று உள்ளார். இந்த நீர்வீழ்ச்சியானது சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் சுற்றுலாவாசிகள் வருகை தருவது வழக்கம்.

எனினும், இந்த நீர்வீழ்ச்சியில் பலர் விழுந்து உயிரிழந்த சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்ததுண்டு. இந்த நிலையில், பூனம்தீப் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று உள்ளார்.

இதில், அவர் திடீரென ஆழமுள்ள குழியில் தவறி விழுந்து உள்ளார். இதனை கண்ட அவருடன் சென்றவர்கள் பதறி உள்ளனர். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை.

பூனம்தீப் உயிரிழந்து விட்டார். இந்த தகவல் தூதரகம் வழியே பூனம்தீப்பின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் மீட்கப்பட்டு விட்டதா? இல்லையா? என்ற விவரங்கள் வெளிவரவில்லை. இதனால் அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Next Story