அமெரிக்காவுடனான பருவநிலை, ராணுவ ஒத்துழைப்புகளை நிறுத்திக் கொள்வதாக சீனா அறிவிப்பு


அமெரிக்காவுடனான பருவநிலை, ராணுவ ஒத்துழைப்புகளை நிறுத்திக் கொள்வதாக சீனா அறிவிப்பு
x

அமெரிக்காவுடன் பல்வேறு விவகாரங்களில் வழங்கப்பட்டு வந்த ஒத்துழைப்புகளை நிறுத்திக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளது.

பீஜிங்,

சீனாவின் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில், கடந்த 2-ந் தேதி இரவு தைவான் தலைநகர் தைபேவுக்கு, அமெரிக்காவை ஆளும் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சென்று, அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து, அமெரிக்காவின் உறுதியான ஆதரவைத் தெரிவித்தார்.

இது சீனாவுக்கு அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தைவானைச் சுற்றிலும் முற்றுகையிட்டு, அந்நாட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் சீனா அதிநவீன் 'டாங்பெங்' ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது. இதனால் அங்கு தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுடன் பல்வேறு விவகாரங்களில் வழங்கப்பட்டு வந்த ஒத்துழைப்புகளை முழுவதும் நிறுத்திக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளது. நான்சி பெலோசியின் தைவான் வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காவுடனான ராணுவ உரையாடல், பருவநிலை குறித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் சட்டவிரோத இடப்பெயர்வு தொடர்பான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நிறுத்திக்கொள்வதாக சீனா தெரிவித்துள்ளது. முன்னதாக நான்சி பெலோசி மற்றும் அவரது உடனடி குடும்பத்தினர் மீது சீனா பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story