சீனாவில் செயற்கை மழையை உருவாக்க முடிவு


சீனாவில் செயற்கை மழையை உருவாக்க முடிவு
x

சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுவதால், பயிா்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கி, மேக விதைப்பு முறையைக் கையாள சீன அரசு முடிவு செய்துள்ளது.

பிஜீங்,

சீனாவில் 61 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகமாக பதிவானது. இதனால் நீா்த்தேக்கங்களில் நீா்மட்டத்தின் அளவு பாதியாக குறைந்துவிட்டது. சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்ததால், வீடுகளில் குளிா்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாத கடந்த வாரம் மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

சீனாவின் தென் பகுதியில் அடுத்த 10 நாள்களில் நெற்பயிரில் சேதத்தைக் குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வேளாண் துறை மந்திரி தாங் ரெஞ்சியன் தெரிவித்ததாக குளோபல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், 'சீனாவின் ஆண்டு மொத்த உற்பத்தியில் இலையுதிா் கால அறுவடை 75 சதவீதம் பங்கு வகிப்பதால், எவ்வித சேதமும் ஏற்படாதவாறு அறுவடையை உறுதிப்படுத்த அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றனா்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேகத்தில் ரசாயனத்தை தூவி, செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்புத் திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வேளாண் அமைச்சக அதிகாரபூா்வ வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மழை பொழிய வைப்பதற்கான இடம் குறித்து அதில் எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.


Next Story