சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்; 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
Corona in Singapore
Image Courtesy : AFP
Published on

சிங்கப்பூர்,

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அங்கு தினந்தோறும் சராசரியாக 250 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், இதில் சராசரியாக தினமும் 3 பேர் தீவிர சிகிச்சைப் பரிவில் சேர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வார்டுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை மந்திரி ஆங் யே குங் கூறுகையில், "நாம் கொரோனா தொற்றுடன் வாழ்வதற்கு பழக வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக கொரோனா பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடுதல் பாதுகாப்பிற்காக மேலும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்" என்று தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com