சிட்ரங் புயல் - வங்காளதேசத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு


சிட்ரங் புயல் - வங்காளதேசத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
x

வங்கதேச தலைநகர் டாக்காவில் பலத்த காற்றுடன வீசிய சூறாவளி மற்றும் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

டாக்கா,

சிட்ராங் புயல் வங்காள விரிகுடாவில் இருந்து நேற்று கரையை கடந்தது. இந்தப் புயலால் காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து புயல் வலுவிழந்தது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் புயல் கரையை கடந்ததால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த புயலால் டாக்கா நகரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.

இந்நிலையில், வங்காளதேசத்தில் சிட்ரங் சூறாவளி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில், கமில்லா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 3 பேர், போலா நகரை சேர்ந்த 2 பேர் மற்றும் நரைல், ஷரியத்பூர், பர்குனா மற்றும் டாக்கா நகரங்களை சேர்ந்த தலா ஒருவர் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயலில் இருந்து கடலோர பகுதி மக்களை பாதுகாக்க 15 கடலோர மாவட்டங்களில் 7,030 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுவரை 2 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் டாக்காவில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் இந்தியாவின் அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story