டென்மார்க் அரச குடும்பம் இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்; தமிழகம் வருகை


டென்மார்க் அரச குடும்பம் இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்; தமிழகம் வருகை
x

டென்மார்க் நாட்டின் இளவரசர், இளவரசி மற்றும் நிறுவனங்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பசுமை சக்தி பற்றி ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.



கோபன்ஹேகன்,


டென்மார்க் நாட்டின் இளவரசர் பிரடெரிக் ஆந்திரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் இளவரசி மேரி எலிசபெத் உள்ளிட்டோர் வருகிற 26-ந்தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இதுபற்றி இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் பிரெட்டி ஸ்வானே கூறும்போது, டென்மார்க்கின் இளவரசர், இளவரசி மற்றும் நிறுவனங்கள் வரும் மார்ச் 2-ந்தேதி வரை 5 நாட்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் பயணம் செய்கின்றனர்.

நான் முன்பே கூறியதுபோன்று, டேனிஷ் நாட்டு நிறுவனங்கள் அல்லது தனியார் துறை முதலீட்டுக்கு ஏற்ற இடம் தமிழகம். இதுபோக நிறைய டேனிஷ் நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. குறிப்பிடும்படியாக ஆற்றல் பிரிவில் நிறைய செயல்பட்டு வருகின்றன.

காற்றாலைக்கான சர்வதேச அளவிலான வினியோக பிரிவிலும் ஈடுபட்டு உள்ளன. காற்றாலைக்கான இயந்திரங்கள், தட்டுகள், கேபிள்கள் மற்றும் அதற்கு எவையெல்லாம் தேவையோ அவை அனைத்தும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன என கூறியுள்ளார்.

அதனால், பசுமை சக்தி, ஆற்றல் பரிமாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக எங்களது நாட்டு அரசர்கள், மந்திரிகள் மற்றும் எங்களுடைய நிறுவனங்களும் தமிழகத்திற்கு வருகை தருகின்றன என அவர் கூறியுள்ளார்.

டென்மார்க் நாட்டு அரச குடும்பத்தில் இருந்து அரச தம்பதி வருவது 2 தசாப்தங்களில் இது முதன்முறை ஆகும். கடந்த 2003-ம் ஆண்டில் கடைசியாக டென்மார்க் இளவரசர் வந்து சென்றார். அதற்கு முன் 1963-ம் ஆண்டு டென்மார்க் அரசி 2-ம் மார்கரெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் அழைப்பின் பேரில் அரச குடும்பத்தினர் வருகை தருகின்றனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்து உள்ளது.


Next Story