உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரிப்பு


உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரிப்பு
x

2012-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போது உகாண்டாவில் மீண்டும் எபோலா நோய் பரவல் ஏற்பட்டுள்ளது.

கம்பாலா,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதுவரை 18 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 18 பேருக்கு எபோலா பாதிப்பிற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே எபோலா பாதிப்பால் உகாண்டாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் மேலும் 18 பேர் எபோலா பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என்றும், மருத்துவ அறிக்கைகள் வந்த பிறகே அதனை உறுதி செய்ய முடியும் என்றும் உகாண்டா அரசு தெரிவித்துள்ளது.

உகாண்டாவில் இதற்கு முன் கடந்த 2000-ம் ஆண்டில் எபோலா நோய் பரவல் ஏற்பட்ட போது, 200 பேர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து 2012-ம் ஆண்டில் எபோலா பரவல் ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது உகாண்டாவில் மீண்டும் எபோலா நோய் பரவல் ஏற்பட்டுள்ளது.

தற்போது உகாண்டாவில் எபோலா பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நபர்களுக்கு, எபோலா வைரசின் 6 வகைகளில் ஒன்றான 'சூடான் வகை எபோலா' தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா வைரசுக்கு எதிராக பயன்படுத்தப்படும் 'எர்பெவோ' தடுப்பூசியை சூடான் வகை எபோலாவிற்கு பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் சூடான் வகை எபோலாவிற்கு எதிராக 6 தடுப்பூசிகள் பல்வேறு வளர்ச்சி கட்டங்களில் உள்ளன. இந்த தடுப்பூசிகளின் ஆய்வக சோதனைகள் நிறைவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story