பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு எகிப்து வெளியுறவு மந்திரி பயணம்


பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு எகிப்து வெளியுறவு மந்திரி பயணம்
x

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு எகிப்து வெளியுறவு மந்திரி பயணம் மேற்கொண்டுள்ளார்.

கெய்ரோ,

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.

துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியா வரை நீண்டது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.

இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர். சிரியா மற்றும் லெபனான் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளையும் இந்த வலுவான நிலநடுக்கம் பாதித்தது.

இந்நிலையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் எகிப்து வெளியுறவு மந்திரி சமே ஷோக்ரி பயணம் மேற்கொண்டுள்ளார். எகிப்து நாட்டின் மந்திரி ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் சிரியா செல்வது இதுவே முதல் முறையாகும். சிரியாவை தொடர்ந்து அவர் துருக்கிக்கும் செல்லவுள்ளார்.

எகிப்திய வெளியுறவு மந்திரியின் வருகை, நெருக்கடி காலங்களில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.


Next Story