பிரான்சில் பரவி வரும் காட்டுத்தீ; எரிந்து போன 900 ஹெக்டேர் நிலங்கள்


பிரான்சில் பரவி வரும் காட்டுத்தீ; எரிந்து போன 900 ஹெக்டேர் நிலங்கள்
x

பிரான்சின் தென்கிழக்கில் ஏற்பட்ட புதிய காட்டுத்தீயால் 900 ஹெக்டேர் நிலங்கள் முற்றிலும் எரிந்து போய் விட்டன.



பாரீஸ்,



ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் தீவிர வெப்ப அலை பரவி வருகிறது. இதனால், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளில் பலி எண்ணிக்கை 1,750க்கும் கூடுதலாக சென்று உள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளிலும் வெப்ப அலை பரவல் மக்களை வாட்டி வருகிறது.

வெப்ப அலையால் பல இடங்களில் காட்டுத்தீயும் பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயானது ஸ்பெயின், போர்ச்சுகலை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் பரவியுள்ளது. இதனால், பிரான்சில் பல நகரங்களை சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். இதனை அந்நாட்டு தினசரி பத்திரிகையான லே பிகாரோ தெரிவித்து உள்ளது.

காட்டுத்தீயானது, ஆர்டிச் ஆற்றை ஒட்டிய நில பகுதியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அது வோக் நகரை நோக்கி பரவி செல்கிறது. அந்த பகுதியில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனை உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும், லாவில்லேடியு பகுதியில் தொழில் மண்டலங்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

காட்டுத்தீயை அணைக்க 500 தீயணைப்பு வீரர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர வான்வழியே தீயை அணைக்கும் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன என லே பிகாரோ தெரிவித்து உள்ளது.

இந்த காட்டுத்தீயால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு சாலைகள் மூடப்பட்டு உள்ளன. மக்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. தென்கிழக்கு பிரான்சில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் அகோர பிடியில் சிக்கி 900 ஹெக்டேர் நிலங்கள் எரிந்து போய் விட்டன.


Next Story