பொருளாதார மந்தநிலை...? 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் 'கூகுள் தாய்' நிறுவனம்


பொருளாதார மந்தநிலை...? 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கூகுள் தாய் நிறுவனம்
x

12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி - நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதேபோல், அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கி, நிதி சேவை நிறுவனமான கோல்ட்மென் சச்ஸ் சுமார் 3 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமேசான் நிறுவனமும் தங்கள் ஊழியர்களில் கணிசமான அளவிற்கு பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உலக அளவில் பல்வேறு நாடுகளில் கிளைகளை அமைத்துள்ள பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் அளவை குறைத்துவரும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமும் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதிலும் ஆல்பாபெட் நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், இதில் அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.


Next Story