ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசு அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தலிபான் அரசு அறிவித்துள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 8 முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.
தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகரில் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. உயர்ந்த கட்டிடங்களில் இருந்து பலர் அலறியடித்தபடி வெளியேறி, தெருவில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். தொடர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, கோர்யான், சிந்தா ஜன் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள 12 கிராமங்கள் முற்றிலும் பேரழிவை சந்தித்துள்ளது என்றும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.