20 நிமிடங்களில் 5 ஆயிரம் ஏவுகணைகள் ஏவிய பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்கள் - இஸ்ரேலில் பெரும் பதற்றம்: போர் அறிவிப்பு


20 நிமிடங்களில் 5 ஆயிரம் ஏவுகணைகள் ஏவிய பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்கள் - இஸ்ரேலில் பெரும் பதற்றம்: போர் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2023 7:00 AM GMT (Updated: 7 Oct 2023 8:08 AM GMT)

இஸ்ரேலின் பல்வேறு நகரங்கள் மீது ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.

அதேவேளை, ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றன. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன.

மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலின் தெற்கு நகரங்கள் மீது அதிக அளவில் தாக்குதல் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இதில் பல்வேறு ஏவுகணைகள் இஸ்ரேல் நகரங்கள் மீது தாக்கியுள்ளன.

அல் அக்சா பிளோட் என்ற பெயரில் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடங்கியுள்ளதாக பாலஸ்தீனிய ஆயுதக்குழு ஹமாஸ் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் இஸ்ரேலின் எல்லை நகரங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை ஒரு இஸ்ரேலியர் உயிரிழந்துள்ளார். மேலும், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இஸ்ரேலிய எல்லை நகரங்களில் உள்ள காவல் நிலையங்களை பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் கைப்பற்றியுள்ளதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் திடீரென அதிரடி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய - கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Next Story