போர் பதற்ற சூழலில்... இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு


தினத்தந்தி 20 April 2024 12:18 PM GMT (Updated: 20 April 2024 12:45 PM GMT)

ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த, ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படையினரை உள்ளடக்கிய ராணுவ தளத்தின் மீது இரவோடு இரவாக இஸ்ரேல், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது பதற்ற நிலையை அதிகரித்தது உள்ளது.

தெஹ்ரான்,

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களை கட்டமைக்க உள்ளது என்று இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டை கூறியுள்ளன.

ஆனால், இதனை ஈரான் மறுத்துள்ளது. நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அமைதிக்காகவும் மற்றும் குடிமக்களின் நன்மைக்காகவும் என்று கூறியுள்ளது.

இந்த சூழலில், ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த ராணுவ தளத்தின் மீது இரவோடு இரவாக இஸ்ரேல், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தளத்தில், ராணுவ வீரர்கள் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படையினர் ஆகியோர் தங்கியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே, போர் மூள்வதற்கான சூழல் காணப்படும்போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது 3-வது உலக போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளின் ராணுவம், கடற்படை மற்றும் விமான படைகளின் திறன்களை பற்றி காண்போம்.

ஈரான் நாட்டில் மக்கள் தொகையானது, ஒப்பீட்டளவில் இஸ்ரேலை விட அதிகம். இஸ்ரேல் நாட்டை விட ஈரான் 10 மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்டுள்ளது. எனினும், ஈரானின் ராணுவ தளவாடங்கள் சந்தேகத்திற்குரிய நிலையிலேயே உள்ளன. பழைய தொழில்நுட்பத்துடன் கூடிய பீரங்கிகள் மற்றும் விமானங்களையே ஈரான் அரசு பயன்படுத்தி வருகிறது.

ஒப்பீட்டளவில், இஸ்ரேலின் ராணுவம் சிறந்த முறையிலும் மற்றும் வீரர்கள் சிறந்த பயிற்சியை பெற்றும் உள்ளனர். எனினும், ஈரானின் ராணுவ பிரிவுகளில் சில போர்க்களத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டவை என புரட்சி காவல் படையினரை குறிப்பிட்டு, இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் ராயல் யுனைடெட் சர்வீசஸ் மையத்தின் துணை இயக்குநர் டேவிட் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

ஈரானின் மற்ற படைகளை காட்டிலும், புரட்சி காவல் படையினருக்கு சிறந்த ஊதியம் அளிக்கப்பட்டது. இரு நாடுகளின் ராணுவமும் நேருக்கு நேர் மோத கூடிய சூழல் இல்லை என்றபோதும், வளைகுடா அல்லது மத்திய தரைக்கடல் பகுதிகளில் நேரடியாக அல்லது மறைமுக அடிப்படையில் மோதல் ஏற்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் என்றால், அதில் நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய விமானம், வான் பாதுகாப்பு ஆயுதங்கள், சிறிய கடற்படை விமானம் மற்றும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏனெனில், இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று சற்று தொலைவில் அமைந்துள்ளன. இதனால், தொடர்ச்சியாக மோதுவதற்கு இதுபோன்ற நீண்ட தொலைவு தாக்குதலுக்கான ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என கவனத்தில் கொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்கள் பலம்

இஸ்ரேலின் ராணுவம் என எடுத்து கொண்டால், 1,76,500 வீரர்கள் உள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், இஸ்ரேல் கடற்படை மற்றும் இஸ்ரேல் விமான படை ஆகியவற்றை அது உள்ளடக்கியது. நாட்டில் உள்ள குடிமக்கள் 18 வயது நிறைவடைந்ததும், அவர்கள் ஆயுத படைகளில் சேர்ந்து சேவையாற்ற வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

ஈரான் நாட்டு ராணுவத்தில் 5.23 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் உள்ளனர். இதில், ஆளும் அரசுக்கு விசுவாசமிக்கவர்களாக பார்க்கப்படும் இஸ்லாமிய புரட்சி படை வீரர்கள் 1.25 லட்சம் பேர் உள்ளனர். 19 வயது நிரம்பிய ஈரான் இளைஞர்கள் ராணுவத்தில் 18 மாதங்கள் வரை சேவையாற்றி இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

துணை ராணுவ படையான பசீஜ் படைகளில் சிலர் 15 வயது நிறைவடைந்ததும் சேருகின்றனர். ஈரானின் எல்லையை ஆர்தேஷ் எனப்படும் இஸ்லாமிய குடியரசு படைகள் பாதுகாத்து வருகின்றன. 18 ஆயிரம் கடற்படை வீரர்கள் ஈரானிடம் உள்ளனர். 12 ஆயிரம் வான்பாதுகாப்பு வீரர்கள் உள்பட 30 ஆயிரம் விமான படை வீரர்களும் அவர்களிடம் உள்ளனர்.

பீரங்கிகள்

இஸ்ரேல் நாட்டிடம் 3,500 பீரங்கிகள் உள்ளன. ஈரானுடன் ஒப்பிடும்போது, அவை சிறந்த முறையில் செயல்பட கூடியவை. ஈரானிடம் 1,613 பீரங்கிகள் உள்ளன.

இஸ்ரேலிடம், ஈரானை விட விமான ஒழிப்பு ஆயுதங்கள் இரண்டு மடங்கிற்கும் கூடுதலாக உள்ளன. கவச வாகனங்கள் 10,484 என்ற அளவில் உள்ளன. பெரிய ரக துப்பாக்கிகளை கொண்ட பீரங்கிகள் 5,432 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில், 620 இயந்திர வகையை சேர்ந்தவை. இவையெல்லாம் இஸ்ரேலின் ராணுவத்திற்கு பலம் சேர்ப்பவை.

கடற்படை

எனினும், ஈரானிடம் பெரிய அளவில் கடற்படை உள்ளது. இதில், 23 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதுபோக, 12 மிட்ஜெட் வகை நீர்மூழ்கி கப்பல்களும் ஈரான் கைவசம் உள்ளன. வளைகுடா நாடுகளுக்காகவே பயன்பட கூடிய வகையில், ஈரானிலேயே உருவான காதிர் மற்றும் நஹாங் வகையை சேர்ந்த இந்த மிட்ஜெட் வகை நீர்மூழ்கி கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இஸ்ரேலிடம் 3 டால்பின் வகை நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவை ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை. இவை தவிர, 57 ரோந்து மற்றும் கடலோர போர் கப்பல்களும் உள்ளன. இவற்றில் பிற போர்க்கப்பல்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க கூடிய 3 கார்விட் வகை சிறிய போர்க்கப்பல்களும் அடங்கும்.

விமான படை

இஸ்ரேலின் விமான படையில், போரில் ஈடுபட கூடிய 460 விமானங்கள் உள்ளன. இவற்றில், 27 போயிங் எப்15ஏ ஈகிள் ரக விமானங்களும், 7 எப்15பி ரக விமானங்களும் மற்றும் 90 எப்16ஏ ரக போர் விமானங்கள் என வானில் இருந்து வானை தாக்க கூடிய அல்லது வானில் இருந்து தரை பகுதியை தாக்க கூடிய திறன் படைத்த 168 போர் விமானங்களும் அடங்கும்.

இதேபோன்று, தரை பகுதியில் இலக்கை தாக்கும் திறன் பெற்ற 227 விமானங்கள் மற்றும் 65 தாக்குதல் விமானங்களும் இஸ்ரேலிடம் உள்ளன. பீரங்கிகளை சுமந்து கொண்டு வேறு இடத்திற்கு செல்லும் 9 விமானங்கள் மற்றும் பிற போக்குவரத்து விமானங்களும் உள்ளன.

ஈரானிடம், போரில் ஈடுபட கூடிய திறன் படைத்த 336 விமானங்கள் உள்ளன. தரை பகுதியில் இலக்கை தாக்கும் திறன் கொண்ட 108 விமானங்கள் உள்ளன என அறியப்படுகிறது. இவற்றில் ஈரான் மற்றும் ரஷியாவில் தயாரான விமானங்களும் அடங்கும்.

ஏவுகணைகள்

ஏவுகணைகள் வரிசையில் ஈரானிடம், வளைகுடா மற்றும் அதனை கடந்து தாக்கும் திறன் வாய்ந்த ஆயிரம் உயர்தர ஏவுகணைகள் உள்ளன.

இவற்றில், உள்நாட்டிலேயே உற்பத்தியான சஹாப்-3 ஏவுகணைகள் (1,000 கி.மீ. இலக்கை தாக்க கூடியவை), காதர்-1 (1,600 கி.மீ. இலக்கை தாக்க கூடியவை) மற்றும் சஜ்ஜில்-2 (2,400 கி.மீ. இலக்கை தாக்க கூடியவை) ஆகியவையும் அடங்கும். இந்த ஏவுகணைகள் அனைத்தும் புரட்சி படையினரின் வசம் உள்ளவை.

இஸ்ரேலிடம் அணு சக்தி திறன் பெற்ற மற்றும் தென்அமெரிக்கா அல்லது ஓசானியா பகுதிகளை கூட தாக்க கூடிய திறன் படைத்த பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் உள்ளன என பரவலாக நம்பப்படுகிறது.

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் பெற்ற, 200 அணுசக்தி பயன்பாட்டுடன் கூடிய ஏவுகணைகளும் உள்ளன என நம்பப்படுகிறது.

இஸ்ரேல் நாட்டிடம் பிற ராணுவ வசதிகள் உள்ளபோதும், அவர்கள் ஈரான் மீது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய வகையில் போதிய விமானங்களையோ மற்றும் சரியான வகையிலான வெடிகுண்டுகளையே கொண்டிருக்கவில்லை என்றே பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு கடந்த 13-ந்தேதி ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்தது.

ஈரானின் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இந்த சூழலில், இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து கொள்ள வேண்டும் என்று ஈரான் சமீபத்தில் எச்சரித்தது. இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்தது.

சிரியாவில் எங்களுடைய தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியே நாங்கள் தொடுத்த தாக்குதல் ஆகும் என ஈரான் தெரிவித்து இருந்தது. 2 ராணுவ உயரதிகாரிகள் உள்பட ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படையினர் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின், தற்காப்புக்கான நடவடிக்கையாகவே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என ஈரான் மீண்டும் வலியுறுத்தி கூறியிருந்தது.


Next Story