இந்தியாவின் மத சுதந்திர சூழ்நிலையை தொடர்ந்து கவனமாக கண்காணிப்போம் - அமெரிக்கா

இந்தியாவின் மத சுதந்திர சூழ்நிலை குறித்து தொடர்ந்து கவனமாக கண்காணிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மத சுதந்திர சூழ்நிலையை தொடர்ந்து கவனமாக கண்காணிப்போம் - அமெரிக்கா
Published on

வாஷிங்டன்,

மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்ற நாடுகள் சுதந்திரம் வழங்குகின்றனவா?, மதத்திற்காக நாடுகள் மக்களை கொடுமைபடுத்தி, சிறை தண்டனை, கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றனவா என்பதை கணக்கில் கொண்டு நாடுகளின் பட்டியலை அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் கண்காணிக்கிறது.

இந்த ஆணையம் கொடுக்கும் பரிந்துரை, அறிக்கையின் அடிப்படையில் உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரத்தை பட்டியலிட்டு அமெரிக்கா வெளியிட்டு வருகிறது.

இதனிடையே, இந்த ஆணையம் சமீபத்தில் அனுப்பிய பரிந்துரையில் மத சுதந்திரத்தில் இந்தியா மிகவும் கவலைக்குரிய நாடு என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், உலக நாடுகளின் மத சுதந்திரம் தொடர்பான பட்டியலை அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்டது.

அதில், மத சுதந்திரம் 'மிகவும் கவலைக்குரிய' வகையிலான நாடுகள் பட்டியலில் சீனா, பாகிஸ்தான் உள்பட 12 இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த இந்தியா இந்த முறை 'கவலைக்குரிய' வகையிலான நாடு என்று பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமெரிக்க வெளியிட்ட சர்வதேச மத சுதந்திர ஆணையம் அறிக்கையில் இந்தியாவின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவில் பல விதமான மத நம்பிக்கைகள் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். சர்வதேச மத சுதந்திரம் குறித்த எங்கள் ஆண்டு அறிக்கையில், இந்தியா தொடர்பான சில கவலைக்குரிய தகவல்களை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரம் தொடர்பான சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனமாக கண்காணிப்போம்' என்றார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com