ஆப்கானிஸ்தானுக்கு 13 கட்டமாக 45 டன் மருத்துவ பொருட்கள் அனுப்பி இந்தியா உதவி!


ஆப்கானிஸ்தானுக்கு 13 கட்டமாக 45 டன் மருத்துவ பொருட்கள் அனுப்பி இந்தியா உதவி!
x

இந்தியா இதுவரை 13 கட்டமாக 45 டன் மருத்துவ உதவிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவு தட்டுப்பாடு, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

தலிபான் அரசை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்காத நிலையில், அந்நாட்டு மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் இந்திய அரசு மருத்துவ உதவிப் பொருட்கள், கோதுமை ஆகியவற்றை அனுப்பி வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 12 கட்டமாக மருந்துப் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு 13-வது கட்டமாக மருந்து உதவிப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா தனது மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானுக்கு புதிய மருத்துவப் பொருட்களை இன்று வழங்கியது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த பொருட்கள் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.

இந்தியா இதுவரை 13 கட்டமாக 45 டன் மருத்துவ உதவிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. அதில் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், காசநோய் எதிர்ப்பு மருந்துகள், 5,00,000 அளவு கொரோனா தடுப்பூசிகள் என பல மருந்துகள் அடங்கும். அத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 40,000 டன் கோதுமையை அனுப்பி வைத்து உணவு பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story