இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை அந்த இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரம்: அமெரிக்கா


இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை அந்த இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரம்:  அமெரிக்கா
x

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை என்பது அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என அமெரிக்கா ஒதுங்கி கொண்டுள்ளது.



வாஷிங்டன்,


பாகிஸ்தானில் கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று, கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட பெருவெள்ளம் என அடுத்தடுத்து மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனை சரிகட்ட முடியாமல் அரசு திணறி வருகிறது. போதிய அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாத சூழலில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதியகம் உள்ளிட்ட அமைப்புகளிடம் நிதியுதவி கோரி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய 2 நாள் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின்போது, கூடுதலாக 100 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலரை வழங்க அமீரக ஒப்புதலை பெற்றுள்ளார்.

அப்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊடகத்திற்கு அளித்த பேட்டியின்போது ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கான தனது விருப்பங்களை வெளியிட்டார்.

இதுபற்றி இந்தியா தரப்பில் கூறும்போது, அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவையே எப்போதும் இந்தியா விரும்புகிறது. ஆனால், அதுபோன்ற உறவுக்கு, பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட சூழல் அந்நாட்டில் காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் கிண்டல் செய்து பேசினார்.

இந்தியாவிடம் ஷெரீப் பேச்சுவார்த்தைக்காக கெஞ்சி கொண்டு இருக்கிறார். ஆனால், முதலில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுங்கள். அதன்பின் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை பற்றி பரிசீலனை செய்யலாம் என புதுடெல்லி அவரிடம் கூறியுள்ளது என இம்ரான் கான் கூறியுள்ளார்.

இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது அவரிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய, இந்தியாவுடனான பேச்சுவார்த்தை மற்றும் அதற்கு புதுடெல்லி தரப்பில் அளிக்கப்பட்ட பதில் ஆகியவற்றை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பிரைஸ் அளித்த பதிலில், தெற்காசிய பகுதியில் மண்டல ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என நாங்கள் நீண்டகாலம் அழைப்பு விடுத்து வருகிறோம். அதனையே பார்க்க நாங்களும் விரும்புகிறோம். வெகுவிரைவில் பார்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை என்பது அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம். அவர்கள் இருவரும் தத்தமது சொந்த நிலைப்பாட்டில் உள்ளனர். எவ்வளவு விரைவாக, அதில் தீர்வு எட்டப்பட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான விவகாரம் ஆகும் என அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story