பேண்ட்டை கழற்றி விட்டு... இதற்காகவே லண்டனில் ஜட்டியுடன் ஆயிரக்கணக்கானோர் ரெயில் பயணம்


பேண்ட்டை கழற்றி விட்டு... இதற்காகவே லண்டனில் ஜட்டியுடன் ஆயிரக்கணக்கானோர் ரெயில் பயணம்
x
தினத்தந்தி 10 Jan 2023 10:17 AM GMT (Updated: 10 Jan 2023 10:23 AM GMT)

இங்கிலாந்து நாட்டில் ஆண், பெண் பேதமின்றி ஆயிரக்கணக்கானோர் பேண்ட்டை கழற்றி விட்டு ஜட்டியுடன் ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.



லண்டன்,


உலகம் முழுவதும் பல வினோத செயல்களில் அவ்வப்போது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு வரவேற்பும் காணப்படுகிறது. இதன்படி, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ஒரு பிரிவினர் மேற்கொண்ட ரெயில் பயணம் பார்ப்போரை ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

அவர்கள், ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்ததும் தங்களது பேண்ட்டை கழற்றி விட்டு, ரெயிலில் ஏறுகின்றனர். எனினும், மேல்பகுதியில் குளிர்கால ஆடைகளுடன் காணப்படுகின்றனர். தொப்பி, கையுறை, குல்லா போன்றவற்றை வழக்கம்போல் அணிந்து கொள்கின்றனர். காலணி போன்றவற்றையும் கூட அணிந்து உள்ளனர்.

அதன்பின் வழக்கம்போல், ரெயிலில் அமர்ந்து புத்தகம் படிப்பது, மொபைல் போனை பார்ப்பது அல்லது இசையை கேட்பதில் அவர்கள் ஆழ்ந்து விடுகின்றனர்.

இந்த வித்தியாச செயலுக்கு என தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. மக்களை சிரிக்க வைக்க வேண்டும், பார்ப்பவர்களை புன்னகைக்க செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம். உலகின் பல நகரங்களில் கடந்த ஞாயிற்று கிழமை இந்த வினோத செயலை மக்கள் கடைப்பிடித்து உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உறுப்பினராக எல்லாம் ஆக வேண்டியது இல்லை. இதில் ஈடுபட வேண்டுமென்றால், உங்களது பேண்ட்டை கழற்றி விட்டு ரெயிலில் பயணம் செய்ய வேண்டும். அவ்வளவே. இதற்காக பணம் வசூலிக்கவோ, விழிப்புணர்வு ஏற்படுத்தவோ இல்லை என இந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

2002-ம் ஆண்டு முதன்முறையாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்நிகழ்ச்சி தொடங்கியது. அப்படியே சர்வதேச நிகழ்வாக பரவி விட்டது. முதலில் நடந்தபோது, போலீசார் தலையிட்டு சிலரை கைது செய்தனர். பின்பு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இந்த நடைமுறை ஆண்டுதோறும் சூடு பிடிக்க தொடங்கியது. குளிர்காலத்தில், அதுவும் ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் நிலவும் சூழலில் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது காண்போரை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.


Next Story