சொந்தக்கட்சி எம்.பி.க்களிடம் இருந்து இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடி வரிகுறைப்பு திட்டங்கள் மறுபரிசீலனையா?


சொந்தக்கட்சி எம்.பி.க்களிடம் இருந்து இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடி வரிகுறைப்பு திட்டங்கள் மறுபரிசீலனையா?
x

இங்கிலாந்தின் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார்.

லண்டன்,

இங்கிலாந்தின் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார். கடந்த 23-ந்தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு (சுமார் ரூ.4.5 லட்சம் கோடி) வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன்வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ், இந்த வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் பின்வரிசை எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இது லிஸ்டிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவருக்கு நெருக்கமான மந்திரி ஒருவர் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், "நாம் முற்றிலும் ஒரு மோசமான நிலையில் இருக்கிறோம். இதில் இருந்து வெளியேற வழியில்லை. ஒருவேளை லிஸ் டிரஸ் வழி கண்டுபிடிப்பார். ஆனாலும் என்னால் அதைப்பார்க்க முடியவில்லை" என தெரிவித்தார்.

இதையொட்டி ரிஷி சுனக்கின் ஆதரவாளரான மெல் ஸ்டிரைட் கருத்து தெரிவிக்கையில், "நிதிச்சந்தைகளில் அரசு நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும், தெளிவான மாற்றத்தைக் காட்ட வேண்டும்"் என கூறி உள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் மாநகராட்சி வரியை 19 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும், மற்ற வரி குறைப்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்று கூறுகிற பிரதமர் லிஸ் டிரஸ், சொந்தக்கட்சியில் இப்போது எழுந்துள்ள எதிர்ப்பை எப்படி கையாளப்போகிறார், வரி குறைப்பு திட்டங்களை அவர் மறுபரிசீலனை செய்வாரா என்பது அங்கு பேசுபொருளாகி இருக்கிறது.


Next Story