தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கொன்ற இளம்பெண்ணுக்கு 6 ஆண்டு சிறை, ரூ. 13 லட்சம் அபராதம்


தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கொன்ற இளம்பெண்ணுக்கு 6 ஆண்டு சிறை, ரூ. 13 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 21 May 2023 5:10 AM GMT (Updated: 21 May 2023 5:16 AM GMT)

பாலியல் வன்கொடுமை செய்த நபரின் குடும்பத்திற்கு பாதிக்கப்பட்ட இளம்பெண் 13 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் நிஹல்கொயொல்ட் நகரை சேர்ந்த பெண் ரொக்ஸ்னா ருயிஸ் (வயது 23). இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர் கணவர் இன்றி குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் துரித உணவகத்தில் வேலை செய்து வந்தார்.

இதனிடையே, கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ருயிஸ் தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அந்த நபரும் ருயிசும் மது குடித்துள்ளனர். பின்னர், வெகுநேரம் வெளியே சுற்றிய இருவரும் இரவு ருயிஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இரவு வெகுநேரம் ஆனதால் வீட்டிற்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் என அந்த நபர் கூறியதால் அவரை ருயிஸ் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.

அன்று இரவு ருயிஸ் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது அறைக்கு வந்த அந்த நபர் ருயிசை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ருயிஸ் அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்தார்.

பின்னர் அந்த நபரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி இரவோடு இரவாக சாலையில் இழுத்து சென்று வீசியுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் ருயிசை கைது செய்தனர். அவர் கடந்த 9 மாதங்களாக சிறையில் இருந்தார்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ரொக்ஸ்னா ருயிஸ் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அனுமதிக்கப்பட்ட தற்காப்பை விட கூடுதல் பலத்தை பயன்படுத்தி (excessive use of legitimate defence) கொலை செய்ததாக ருயிஸ் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. மேலும் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், கொல்லப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றவாளியின் குடும்பத்திற்கு 16 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 13 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மெக்சிகோ முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை செய்த நபரை தற்காப்பிற்காக கொலை செய்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிப்பதா? என கூறி பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பல அமைப்புகள் மெக்சிகோவில் போராட்டம் நடத்தின. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ரொக்ஸ்னா ருயிசும் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், பெண்கள் அமைப்பினரின் கடுமையான போராட்டத்தையடுத்து ரொக்ஸ்னா ருயிஸ் மீது தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் மெக்சிகோ அரசு திரும்பப்பெற்றது. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் திரும்பப்பெறப்பட்டது. இதனை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை தற்காப்பிற்காக கொலை செய்த ரொக்ஸ்னா குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை திரும்பப்பெறப்பட்டதற்கு ரொக்ஸ்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Next Story