சர்வதேச அளவில் குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு


சர்வதேச அளவில் குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
x

கோப்புப்படம்

24 நாடுகளில் குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ள நிலையில் அதன் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உலக சுகாதா அமைப்பு அறிவித்து உள்ளது.

வாஷிங்டன்,

இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவது இந்த மாத தொடக்கத்தில் தெரியவந்தது.

காய்ச்சல், சிரங்கு போன்ற கொப்புளம் மற்றும் கணுக்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்த தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையேயும் பரவி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக 24 நாடுகளில் இந்த தொற்று தற்போது கண்டறியப்பட்டு இருக்கிறது. சுமார் 300 பேர் குரங்கு காய்ச்சலுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த வைரசின் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக அந்த அமைப்பு அறிவித்து உள்ளது. அத்துடன், அச்சுறுத்தல் நிலையை 'குறைந்த அளவு' என்ற நிலையில் இருந்து 'மிதமான அளவு' என்ற மட்டத்துக்கு உயர்த்தி எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.

முதல் முறையாக பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் வைரஸ் கொத்துக்கள் பதிவாகியுள்ளதும், எந்த தொடர்பும் இல்லாமல் ஆப்பிரிக்காவில் வைரஸ் பரவுவதுமே இந்த நிலை உயர்த்தலுக்கு காரணம் என உலக சுகாதார அமைப்பு விளக்கமும் அளித்திருக்கிறது.

இந்த வைரஸ் வன விலங்குகளுக்குள் பரவி விடும் என்றும், அது அழிக்கப்படாது என்றும் கவலை தெரிவித்து உள்ள உலக சுகாதார அமைப்பு, இது வைரசின் உருமாற்ற அபாயத்தையும் அதிகரிப்பதாக கூறியுள்ளது.

சிறு குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் உள்ளிட்ட அதிக ஆபத்தில் இருக்கும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு இந்த வைரஸ் பரவினால், அது பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

குரங்கு காய்ச்சல் தொற்றின் இந்த எழுச்சியை எச்சரித்துள்ள மருத்துவ நிபுணர்கள், இந்த வைரஸ் பல வாரங்கள் அல்லது அதற்கும் மேலாக அடையாளம் காணப்படாமல் பரவியிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று இன்னமும் முற்றுப்பெறாத நிலையில், குரங்கு காய்ச்சலின் வீரியமும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பது சர்வதேச நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.


Next Story